16 November 2012

66. விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.

வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.

சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்.

-பாரதியார்

No comments:

Post a Comment