பல்லவி
அல்லா! அல்லா! அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
-பாரதியார்
No comments:
Post a Comment