ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்
ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ! தீ! இந்நேரம்.
அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ! தீ! - அம்மாவோ!
ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே! - இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.
அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
வேதமுண்டாமோ! - அம்மாவோ!
ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ! தீ! - இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே! - இந்நேரம்
அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந் தோமே! - அம்மாவோ!
ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டு கின்றானே! - இந்நேரம்.
அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே! - அம்மாவோ!
ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந் தானே! - இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
மகிழ வந்தானே! - இந்நேரம்.
அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே! - அம்மாவோ!
ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே! - இந்நேரம்.
அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமே! - அம்மாவோ!
ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே! - இந்நேரம்
அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே - ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!
ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
இரவி வந்தானே! - இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
மேன்மையுற்றோமே! - இந்நேரம்
ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
அமுது முண்பீரே! - இந்நேரம்
ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே! - இந்நேரம்
ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
சேர்த்து விட்டோமே! - இந்நேரம்
ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
ஓங்கி விட்டானே! - இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
கை கொடுத்தாரே! - இந்நேரம்
ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே! - இந்நேரம்
ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்
-பாரதியார்
No comments:
Post a Comment