21 November 2012

75. வேள்வித் தீ

ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்

ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
      ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
      பாயுதே தீ! தீ! இந்நேரம்.

அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
      சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
      வந்ததே தீ! தீ! - அம்மாவோ!

ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
      போந்து விட்டானே! - இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
      சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.

அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
      ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
      வேதமுண்டாமோ! - அம்மாவோ!

ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
      வளருதே தீ! தீ! - இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
      நண்ணி விட்டாளே! - இந்நேரம்

அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
      கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
      பண்பிழந் தோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
      காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
      வாட்டு கின்றானே! - இந்நேரம்.

அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
      மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
      கண்டு கொண்டாரே! - அம்மாவோ!

ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
      வாய்திறந் தானே! - இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
      மகிழ வந்தானே! - இந்நேரம்.

அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
      ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
      தோன்றி விட்டானே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
      ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
      கோயில் கொண்டானே! - இந்நேரம்.

அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
      மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
      பின்னி மாய்வோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
      அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
      நன்மை கண்டோமே! - இந்நேரம்

அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
      பாடுகின்றானே - ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
      பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!

ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
      இரவி வந்தானே! - இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
      மேன்மையுற்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
      அமுது முண்பீரே! - இந்நேரம்
ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
      வேள்வி கொள்வீரே! - இந்நேரம்

ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
      ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
      சேர்த்து விட்டோமே! - இந்நேரம்

ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
      ஓங்கி விட்டானே! - இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
      கை கொடுத்தாரே! - இந்நேரம்

ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
      யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
      சார்ந்து நின்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
      மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
      வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்

-பாரதியார்

No comments:

Post a Comment