ராகம் - காமாஸ் தாளம் - ஆதி
அனுபல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே ! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)
அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)
சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே,
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி
நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்.
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)
அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
-பாரதியார்
No comments:
Post a Comment