11 November 2012

59. திருமகளைச் சரண்புகுதல்

மாதவன் சக்தியினைச் - செய்ய
      மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
      போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
      வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
      மாமக ளடியிணை சரண்புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
      கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்
      முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர் - பயன்
      எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய
      மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
      பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
      இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
      நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் - செய்ய
      மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே - அன்பு
      நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
      தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
      வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
      பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் - நறும்
      பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
      காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் - மன்னர்
      முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
      பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

மண்ணினுட் கனிகளிலும் - மலை
      வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் - உயர்
      புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
      பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
      நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும் - பல
      விநயங்கள் அறிந்தவர் கடையிலும்,
நற்றவ நடையினிலும் - நல்ல
      நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
      உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
      கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.

-பாரதியார்

No comments:

Post a Comment