16 November 2012

64. மூன்று காதல்

முதலாவது சரஸ்வதி காதல்

ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்


பிள்ளைப் பிராயத்திலே - அவள்
      பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே - மதி
      பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
      வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் - கண்டேன்
      வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!

ஆடிவரு கையிலே - அவள்
      அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
      இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
      ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
      கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!

ஆற்றங் கரைதனிலே - தனி
      யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
      கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
      என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
போற்றிய போதினிலே - இளம்
      புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
      தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் - பகற்
      பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற
      வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
      பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா!

இரண்டாவது - லக்ஷ்மி காதல்

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்


இந்த நிலையினிலே - அங்கொர்
      இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் - அவள்
      சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
      செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
அந்தத் தின முதலா - நெஞ்சம்
      ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!

புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
      போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
      மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
      என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
சின்னமும் பின்னமுமா - மனஞ்
      சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா!

காட்டு வழிகளிலே - மலைக்
      காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
நாட்டுப் புறங்களிலே நகர்
      நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே - சில
      வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் - கண்ட
      விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா!

மூன்றாவது - காளி காதல்

ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்


பின்னொர் இராவினிலே - கரும்
      பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே - களி
      கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
      ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
      யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல
      தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே - இவை
      அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
      வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
      தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

-பாரதியார்

No comments:

Post a Comment