முதலாவது சரஸ்வதி காதல்
ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்
பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் - கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!
ஆடிவரு கையிலே - அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!
ஆற்றங் கரைதனிலே - தனி
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
போற்றிய போதினிலே - இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!
சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் - பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா!
இரண்டாவது - லக்ஷ்மி காதல்
ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே - அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் - அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
அந்தத் தின முதலா - நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!
புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
சின்னமும் பின்னமுமா - மனஞ்
சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா!
காட்டு வழிகளிலே - மலைக்
காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
நாட்டுப் புறங்களிலே நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே - சில
வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் - கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா!
மூன்றாவது - காளி காதல்
ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்
பின்னொர் இராவினிலே - கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே - களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
-பாரதியார்
No comments:
Post a Comment