17 November 2012

69. சூரிய தரிசனம்

ராகம் - பூபாளம்

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
      தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
      பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
      பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
      கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
      வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
      நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
      கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
      அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

-பாரதியார்

No comments:

Post a Comment