யாகப் பாட்டு
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
தீ வளர்த்திடுவோம்! - பெருந்
தீ வளர்த்திடுவோம்!
சரணங்கள்
ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை - நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை - பல
சீர்க ளுடையவனைப் - புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை - உருத்திரன்
அன்புத் திருமகனை - பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)
கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
காட்டை யழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
யாவும் பழகிடவே - புவிமிசை
இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)
நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
வண்ணந் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)
சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர் - இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
தேறிடு நல்லிளமை - நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)
-பாரதியார்
No comments:
Post a Comment