19 November 2012

74. தீ வளர்த்திடுவோம்!

யாகப் பாட்டு
ராகம் - புன்னாகவராளி

பல்லவி


தீ வளர்த்திடுவோம்! - பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்

ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
      அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
      ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
      செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
      தீமை யழிப்பவனை - நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை - பல
      சீர்க ளுடையவனைப் - புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
      ஆரியர் நாயகனை - உருத்திரன்
அன்புத் திருமகனை - பெருந்திர
      ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
      கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
      காட்டை யழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
      யாவும் பழகிடவே - புவிமிசை
இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
      நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
      நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
      ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
      ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
      அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
      யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
      ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
      மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
      வண்ணந் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
      தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
      தேவத் திருமகளிர் - இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
      தேறிடு நல்லிளமை - நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
      முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
      மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

-பாரதியார்

No comments:

Post a Comment