11 November 2012

57. திருவேட்கை

ராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே! - உன்மேல்
      மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
      நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
      களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
      இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
      காத லாகி நின்றேன்.
குமரி நினை இங்கே - பெற்றோர்
      கோடி யின்ப முற்றார்.
அமரர் போல வாழ்வேன் - என்மேல்
      அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத - நின்மேல்
      இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது
      வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? - என்னை
      நன்க றிந்தி லாயோ?
பேணி வையமெல்லாம் - நன்மை
      பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
      பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
      பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
      மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
      என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
      நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
      செம்மை யேரி வாழ்வேன்,
இல்லை என்ற கொடுமை - உலகில்
      இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் - காட்டி,
      மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
      என்றும் வாழ வைப்பாய்.

-பாரதியார்

No comments:

Post a Comment