07 November 2012

49. கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ண முடையான் - மணி
வண்ண முடையான் - உயிர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
புண்ணை யொழிப்பீர் - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
கண்ணை விழிப்பீர் - இனி
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)

அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான் - சுரர்
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
இக்கணந் தன்னில் - இங்கு
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் - உயிர்
கக்கி முடித்தார் - கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)

சங்கரன் வந்தான், - இங்கு
மங்கல மென்றான் - நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,
பங்க மொன் றில்லை - ஒளி
மங்குவதில்லை, - இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
கங்கையும் வந்தாள் - கலை
மங்கையும் வந்தாள், - இன்பக்
காளி பராசக்தி அன்புடனெய்தினள்,
செங்கம லத்தாள் - எழில்
பொங்கு முகத்தாள் - திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)

-பாரதியார்

No comments:

Post a Comment