ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
கணபதி ராயன் - அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
-பாரதியார்
No comments:
Post a Comment