நொண்டிச் சிந்து
எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் - கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.
மாதமொர் நான்காநீர் - அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!
கண்மணி போன்றவரே! இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! - இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!
தானெனும் பேய்கெடவே - பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே - நல
வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!
தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே - உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் - பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; - இனி
மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!
-பாரதியார்
No comments:
Post a Comment