15 November 2012

61. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
      இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் - கடல்
      திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
      காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
      புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

மாதமொர் நான்காநீர் - அன்பு
      வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
      பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
      நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
      விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

கண்மணி போன்றவரே! இங்குக்
      காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
      பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
      வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! - இனி
      அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

தானெனும் பேய்கெடவே - பல
      சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே - நல
      வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
      திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
      ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
      தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே - உம்மை
      மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் - பொறை
      சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; - இனி
      மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!

-பாரதியார்

No comments:

Post a Comment