23 November 2012

78. அல்லா

பல்லவி

அல்லா! அல்லா! அல்லா!

சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)

கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)

 -பாரதியார்

77. யேசு கிறிஸ்து

'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
      எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமாமரியா' மக்த லேநா
      நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
      தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
      நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்புகாண் மரியா மக்த லேநா
      ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
      மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
      போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
      ஆஹ! சாலப் பெருங்கிளி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
      உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
      வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
      பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து,
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
      நொடியி லிஃது பயின்றிட லாகும்.

-பாரதியார்

21 November 2012

76. கிளிப்பாட்டு

திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே! - மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! - கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே! - அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே! - அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே! நெருங்கித் துயர் வருமோ?

-பாரதியார்

75. வேள்வித் தீ

ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்

ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
      ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
      பாயுதே தீ! தீ! இந்நேரம்.

அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
      சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
      வந்ததே தீ! தீ! - அம்மாவோ!

ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
      போந்து விட்டானே! - இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
      சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.

அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
      ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
      வேதமுண்டாமோ! - அம்மாவோ!

ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
      வளருதே தீ! தீ! - இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
      நண்ணி விட்டாளே! - இந்நேரம்

அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
      கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
      பண்பிழந் தோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
      காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
      வாட்டு கின்றானே! - இந்நேரம்.

அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
      மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
      கண்டு கொண்டாரே! - அம்மாவோ!

ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
      வாய்திறந் தானே! - இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
      மகிழ வந்தானே! - இந்நேரம்.

அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
      ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
      தோன்றி விட்டானே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
      ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
      கோயில் கொண்டானே! - இந்நேரம்.

அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
      மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
      பின்னி மாய்வோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
      அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
      நன்மை கண்டோமே! - இந்நேரம்

அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
      பாடுகின்றானே - ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
      பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!

ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
      இரவி வந்தானே! - இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
      மேன்மையுற்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
      அமுது முண்பீரே! - இந்நேரம்
ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
      வேள்வி கொள்வீரே! - இந்நேரம்

ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
      ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
      சேர்த்து விட்டோமே! - இந்நேரம்

ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
      ஓங்கி விட்டானே! - இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
      கை கொடுத்தாரே! - இந்நேரம்

ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
      யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
      சார்ந்து நின்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
      மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
      வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்

-பாரதியார்

19 November 2012

74. தீ வளர்த்திடுவோம்!

யாகப் பாட்டு
ராகம் - புன்னாகவராளி

பல்லவி


தீ வளர்த்திடுவோம்! - பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்

ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
      அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
      ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
      செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
      தீமை யழிப்பவனை - நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை - பல
      சீர்க ளுடையவனைப் - புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
      ஆரியர் நாயகனை - உருத்திரன்
அன்புத் திருமகனை - பெருந்திர
      ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
      கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
      காட்டை யழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
      யாவும் பழகிடவே - புவிமிசை
இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
      நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
      நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
      ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
      ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
      அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
      யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
      ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
      மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
      வண்ணந் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
      தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
      தேவத் திருமகளிர் - இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
      தேறிடு நல்லிளமை - நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
      முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
      மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

-பாரதியார்

73. வெண்ணிலாவே

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
      வெண்ணிலாவே! - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
      வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
      வெண்ணிலாவே! - நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
      வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
      வெண்ணிலாவே! - இந்த
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
      வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
      வெண்ணிலாவே! - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
      வெண்ணிலாவே!

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
      வெண்ணிலாவே! - அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
      வெண்ணிலாவே!
காத லொருத்தி இளைய பிராயத்தள்
      வெண்ணிலாவே! - அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
      வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள்
      வெண்ணிலாவே! - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
      வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
      வெண்ணிலாவே! - நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
      வெண்ணிலாவே!

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
      வெண்ணிலாவே! - நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
      வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
      வெண்ணிலாவே! - அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
      வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
      வெண்ணிலாவே! - இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
      வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
      வெண்ணிலாவே! - நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
      வெண்ணிலாவே!

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
      வெண்ணிலாவே! - நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
      வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
      வெண்ணிலாவே! - நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
      வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
      வெண்ணிலாவே! - நீ
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை
      வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
      வெண்ணிலாவே! - நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
      வெண்ணிலாவே!

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
      வெண்ணிலாவே! - உன்றன்
மேனி யழகு மிகைபடக் காணுது
      வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
      வெண்ணிலாவே! - மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
      வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
      வெண்ணிலாவே! - நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
      வெண்ணிலாவே!
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
      வெண்ணிலாவே! - இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
      வெண்ணிலாவே!

-பாரதியார்

72. சோமதேவன் புகழ்

ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!

சரணம்

நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
      வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
      துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்.
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய்
      உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்
      பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)

-பாரதியார்

71. ஞான பாநு

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்.

-பாரதியார்

17 November 2012

70. ஞாயிறு வணக்கம்

கடலின்மீது கதிர்களை வீசிக்
      கடுகி வான்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
      பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே
      ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
      சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.

என்ற னுள்ளங் கடலினைப் போலே
      எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
      நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா!
      ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
      வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல் கொண்டனை போலும் மண்மீதே,
      கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
      மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
      தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
      ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.

-பாரதியார்

69. சூரிய தரிசனம்

ராகம் - பூபாளம்

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
      தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
      பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
      பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
      கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
      வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
      நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
      கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
      அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

-பாரதியார்

68. ஆரிய தரிசனம்

ஓர் கனவு

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி


கனவென்ன கனவே - என்றன்
கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)

கானகங் கண்டேன் - அடர்
கானகங் கண்டேன் - உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)

பொற்றிருக் குன்றம் - அங்கொர்
பொற்றிருக் குன்றம் - அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)

புத்த தரிசனம்

குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

பொன்மரத் தின்கீழ் - அந்தப்
பொன்மரத் தின்கீழ் - வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

புத்த பகவன் - எங்கள்
புத்த பகவன் - அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)

காந்தியைப் பார்த்தேன் - அவன்
காந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)

ஈதுநல் விந்தை! - என்னே!
ஈதுநல் விந்தை! - புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)

பாய்ந்ததங் கொளியே; - பின்னும்
பாய்ந்ததங் கொளியே; - அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)

தேரின்முன் பாகன் - மணித்
தேரின்முன் பாகன் - அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

ஓமென்ற மொழியும் - அவன்
ஓமென்ற மொழியும் - நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)

அருள் பொங்கும் விழியும் - தெய்வ
அருள் பொங்கும் விழியும் - காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன)

கண்ணனைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் - மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)

சேனைகள் தோன்றும் - வெள்ளச்
சேனைகள் தோன்றும் - பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)

கண்ணன்நற் றேரில் - நீலக்
கண்ணன்நற் றேரில் - மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

விசையன்கொ லிவனே! - வ'றல்
விசையன்கொ லிவனே! - நனி
இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)

வீரிய வடிவம்! - என்ன
வீரிய வடிவம்! - இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை)

பெற்றதன் பேறே - செவி
பெற்றதன் பேறே - அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)

"வெற்றியை வேண்டேன்; - ஜய
வெற்றியை வேண்டேன்! - உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)

சுற்றங் கொல்வேனோ? - என்றன்
சுற்றங் கொல்வேனோ? - கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?" (பெற்ற)

மிஞ்சிய அருளால் - மித
மிஞ்சிய அருளால் - அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

இம்மொழி கேட்டான் - கண்ணன்
இம்மொழி கேட்டான் - ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

வில்லினை யெடடா! கையிற்
வில்லினை யெடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை)

வாடி நில்லாதே; - மனம்
வாடி நில்லாதே; - வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)

ஒன்றுள துண்மை - என்றும்
ஒன்றுள துண்மை - அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)

துன்பமு மில்லை - கொடுந்
துன்பமு மில்லை - அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)

படைகளுந் தீண்டா - அதைப்
படைகளுந் தீண்டா - அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)

செய்தலுன் கடனே - அறஞ்
செய்தலுன் கடனே - அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)

-பாரதியார்

16 November 2012

67. ஜயம் உண்டு

ராகம் - காமாஸ் தாளம் - ஆதி

அனுபல்லவி


ஜயமுண்டு பயமில்லை மனமே ! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே,
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி
நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்.
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

-பாரதியார்

66. விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.

வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.

சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்.

-பாரதியார்

65. ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன் - அவனிரு
      காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
      கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
      சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
      வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

வெற்றி வடிவேலன் - அவனுடை
      வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
      துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
      தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
      புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
      பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
      வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
      சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
      திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

-பாரதியார்

64. மூன்று காதல்

முதலாவது சரஸ்வதி காதல்

ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்


பிள்ளைப் பிராயத்திலே - அவள்
      பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே - மதி
      பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
      வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் - கண்டேன்
      வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!

ஆடிவரு கையிலே - அவள்
      அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
      இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
      ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
      கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!

ஆற்றங் கரைதனிலே - தனி
      யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
      கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
      என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
போற்றிய போதினிலே - இளம்
      புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
      தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் - பகற்
      பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற
      வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
      பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா!

இரண்டாவது - லக்ஷ்மி காதல்

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்


இந்த நிலையினிலே - அங்கொர்
      இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் - அவள்
      சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
      செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
அந்தத் தின முதலா - நெஞ்சம்
      ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!

புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
      போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
      மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
      என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
சின்னமும் பின்னமுமா - மனஞ்
      சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா!

காட்டு வழிகளிலே - மலைக்
      காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
நாட்டுப் புறங்களிலே நகர்
      நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே - சில
      வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் - கண்ட
      விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா!

மூன்றாவது - காளி காதல்

ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்


பின்னொர் இராவினிலே - கரும்
      பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே - களி
      கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
      ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
      யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல
      தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே - இவை
      அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
      வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
      தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

-பாரதியார்

15 November 2012

63. நவராத்திரிப் பாட்டு

(மாதா பராசக்தி) பராசக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)


மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே !
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

-பாரதியார்

62. வெள்ளைத் தாமரை

ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
      வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
      கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
      ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
      கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
      மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
      கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
      குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
      இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
      வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
      வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
      வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
      தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
      தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
      உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
      செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
      கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
      சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
      வாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
      வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
      சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
      நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
      தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
      கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
      உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
      செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
      சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
      கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
      இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
      பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
      நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
      ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
      வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)

-பாரதியார்

61. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
      இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் - கடல்
      திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
      காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
      புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

மாதமொர் நான்காநீர் - அன்பு
      வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
      பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
      நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
      விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

கண்மணி போன்றவரே! இங்குக்
      காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
      பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
      வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! - இனி
      அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

தானெனும் பேய்கெடவே - பல
      சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே - நல
      வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
      திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
      ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
      தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே - உம்மை
      மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் - பொறை
      சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; - இனி
      மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!

-பாரதியார்

11 November 2012

60. ராதைப் பாட்டு

ராகம் - கமாஸ் தாளம் - ஆதி

பல்லவி


தேகி முதம் தேகி ஸ்ரீராதே, ராதே!

சரணங்கள்

ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந, ராதே, ராதே!
போக ரதி கோடி துல்யே ராதே, ராதே! ஜயஜய (தேகி)

பூதேவி தப; பல ராதே, ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்தியா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதிபரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி)

தமிழ்க்கண்ணிகள்

காதலெனுந் தீவினிலே, ராதே ராதே! அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி)

காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே! நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி)

மாதரசே! செல்வப் பெண்ணே, ராதே, ராதே! - உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி)

-பாரதியார்

59. திருமகளைச் சரண்புகுதல்

மாதவன் சக்தியினைச் - செய்ய
      மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
      போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
      வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
      மாமக ளடியிணை சரண்புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
      கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்
      முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர் - பயன்
      எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய
      மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
      பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
      இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
      நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் - செய்ய
      மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே - அன்பு
      நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
      தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
      வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
      பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் - நறும்
      பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
      காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் - மன்னர்
      முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
      பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

மண்ணினுட் கனிகளிலும் - மலை
      வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் - உயர்
      புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
      பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
      நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும் - பல
      விநயங்கள் அறிந்தவர் கடையிலும்,
நற்றவ நடையினிலும் - நல்ல
      நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
      உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
      கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.

-பாரதியார்

58. திருமகள் துதி

ராகம் - சக்ரவாகம் தாளம் - திஸ்ர ஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
      நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே
      பெருமை யுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்!
      செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வ ரென்றே
      உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
      சுடர் மணியே! திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
      மேவிடுவாய், திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ
      உலக மிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்
      புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
      மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ
      மணிக்குள முள்ள சோலைகளும்;
அன்னம் நறுநெய் பாலும்
      அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
      நிலைத்திருப்பேன், திருவே!

ஆடுகளும் மாடுகளும்
      அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
      விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
      எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
      மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடுமணிச் செல்வ மெல்லாம்
      நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
      பெருங்களியே, திருவே!

 -பாரதியார்

57. திருவேட்கை

ராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே! - உன்மேல்
      மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
      நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
      களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
      இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
      காத லாகி நின்றேன்.
குமரி நினை இங்கே - பெற்றோர்
      கோடி யின்ப முற்றார்.
அமரர் போல வாழ்வேன் - என்மேல்
      அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத - நின்மேல்
      இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது
      வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? - என்னை
      நன்க றிந்தி லாயோ?
பேணி வையமெல்லாம் - நன்மை
      பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
      பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
      பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
      மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
      என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
      நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
      செம்மை யேரி வாழ்வேன்,
இல்லை என்ற கொடுமை - உலகில்
      இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் - காட்டி,
      மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
      என்றும் வாழ வைப்பாய்.

-பாரதியார்

10 November 2012

56. திருக்காதல்

திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்
வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்
மையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது
தேனே! என்திரு கண்ணே - எனையுகந்து
தானே! வருந் திருப் - பெண்ணே

-பாரதியார்

55. கண்ணம்மாவின் எழில்

ராகம் - செஞ்சுருட்டி தாளம் - ரூபகம்

பல்லவி


எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்,
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று,
மதுர வாய் அமிர்தம், இத ழமிர்தம்,
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய வரம்பை, சதுர் அயிராணி. (எங்கள்)

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்,
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்)

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்,
தாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்!
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்)

-பாரதியார்

54. மனப்பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்
பீடத்தி லேறிக் கொண்டான்.

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
      கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி
மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி
      ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
      மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து
      வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
      விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
      எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்
      கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்
      உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)

-பாரதியார்

53. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)

-பாரதியார்

08 November 2012

52. கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
      காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
      வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
      வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
      விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
      நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
      பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
      மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
      சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

-பாரதியார்

51. வேய்ங்குழல்

ராகம் - ஹிந்துஸ்தான் தோடி
தாளம் - ஏகதாளம்


எங்கிருந்து வருகு வதோ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ? - மரக்
      கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
      மதி மருண்டிடச் செய்குதடி! - இஃது, (எங்கிருந்து)

அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
      யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
      எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)

காட்டி னின்றும் வருகுவதோ? - நிலாக்
      காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
      நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)

பறவை யேதுமொன் றுள்ளதுவோ? - இங்ஙன்
      பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
      வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)

கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
      காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
      பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)

-பாரதியார்

07 November 2012

50. கண்ணன் திருவடி

கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே

தருமே நிதியும், பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை, பொங்கும் நலமே

நலமே நாடிற் புலவீர் பாடீர்,
நிலமா மகளின், தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே

தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர், புவியீர் மாலும்
சிவனும் வானோர், எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே.

-பாரதியார்

49. கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ண முடையான் - மணி
வண்ண முடையான் - உயிர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
புண்ணை யொழிப்பீர் - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
கண்ணை விழிப்பீர் - இனி
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)

அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான் - சுரர்
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
இக்கணந் தன்னில் - இங்கு
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் - உயிர்
கக்கி முடித்தார் - கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)

சங்கரன் வந்தான், - இங்கு
மங்கல மென்றான் - நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,
பங்க மொன் றில்லை - ஒளி
மங்குவதில்லை, - இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
கங்கையும் வந்தாள் - கலை
மங்கையும் வந்தாள், - இன்பக்
காளி பராசக்தி அன்புடனெய்தினள்,
செங்கம லத்தாள் - எழில்
பொங்கு முகத்தாள் - திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)

-பாரதியார்

06 November 2012

48. நந்த லாலா

ராகம் - யதுகுல காம்போதி தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!

-பாரதியார்

47. கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே - நீ

காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே - நீ
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே - நீ

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ

வேறு
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!

-பாரதியார்

03 November 2012

46. வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

உருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் - கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே - கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்)

-பாரதியார்

45. கண்ணனை வேண்டுதல்

வேத வானில் விளங்கி அறஞ்செய்மின்
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்
தீத கற்றுமின் என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

உண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.

எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.

வீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்
பார தர்செய் தவத்தின் பயனெனும்
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ.

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே,
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.

ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்
கொற்றவா! நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.

நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.

44. கோவிந்தன் பாட்டு

கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு

நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும், மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.

எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ?

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு

வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா
எனக்கமுதம் புகட்டு வாயே.

-பாரதியார்

02 November 2012

43. சாகா வரம்

பல்லவி

சாகவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!

சரணங்கள்

ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)

வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)

நித்யா, நிர்மலா, ராமா
நிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா)

-பாரதியார்

42. கோமதி மஹிமை

தாருக வனத்தினிலே - சிவன்
      சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் - பர
      சிவன்பு கழமுதினை அருந்திடுவார்,
பேருயர் முனிவர் முன்னே - கல்விப்
      பெருங் கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்
      சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்.

வாழிய, முனிவர்களே! - புகழ்
      வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், - இந்த
      உலக மெலாமுருக் கொண்டபிரான்.
ஏழிரு புவனத்திலும் - என்றும்
      இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், - ஒளி
      யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான்.

தேவர்க் கெலாந்தேவன். - உயர்
      சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் - அந்தக்
      கண்ணுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவர்கள் - பல
      ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான். - அந்த
      வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.

கேளீர், முனிவர்களே! இந்தக்
      கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
      வேதங்க ளாயிர முறைபடித்தால்,
மூளுநற் புண்ணியந்தான் - வந்து
      மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்,
நாளுநற் செல்வங்கள் - பல
      நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்!

இக்கதை உரைத்திடுவேன், - உளம்
      இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் - இங்கு
      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் - வளர்
      தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? - புவி
      எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரானறிவான், - மற்று
      நானறி யேன்பிற நரரறியார்.
தொக்க பேரண்டங்கள் - கொண்ட
      தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ஒளி
      தருகின்ற வானமோர் கடல்போலாம் ,
அக்கட லதனுக்கே - எங்கும்
      அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.

இக்கட லதனக்கே - அங்கங்
      கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள், - திசைத்
      தூவெளி யதனிடை விரைந்தோடும்,
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
      வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்!
மெய்க்கலை முனிவர்களே! - இதன்
      மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்!

எல்லை யுண்டோ இலையோ? - இங்கு
      யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லிமொர் வரம்பிட்டால் - அதை
. . . . . .
(இது முற்றுப் பெறவில்லை) 

-பாரதியார்