ராகம் - ஹிந்துஸ்தான் தோடி
தாளம் - ஏகதாளம்
எங்கிருந்து வருகு வதோ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி!
குன்றி னின்றும் வருகுவதோ? - மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
மதி மருண்டிடச் செய்குதடி! - இஃது, (எங்கிருந்து)
அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)
காட்டி னின்றும் வருகுவதோ? - நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)
பறவை யேதுமொன் றுள்ளதுவோ? - இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)
கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
-பாரதியார்
No comments:
Post a Comment