19 November 2012

73. வெண்ணிலாவே

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
      வெண்ணிலாவே! - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
      வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
      வெண்ணிலாவே! - நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
      வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
      வெண்ணிலாவே! - இந்த
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
      வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
      வெண்ணிலாவே! - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
      வெண்ணிலாவே!

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
      வெண்ணிலாவே! - அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
      வெண்ணிலாவே!
காத லொருத்தி இளைய பிராயத்தள்
      வெண்ணிலாவே! - அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
      வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள்
      வெண்ணிலாவே! - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
      வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
      வெண்ணிலாவே! - நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
      வெண்ணிலாவே!

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
      வெண்ணிலாவே! - நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
      வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
      வெண்ணிலாவே! - அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
      வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
      வெண்ணிலாவே! - இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
      வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
      வெண்ணிலாவே! - நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
      வெண்ணிலாவே!

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
      வெண்ணிலாவே! - நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
      வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
      வெண்ணிலாவே! - நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
      வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
      வெண்ணிலாவே! - நீ
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை
      வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
      வெண்ணிலாவே! - நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
      வெண்ணிலாவே!

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
      வெண்ணிலாவே! - உன்றன்
மேனி யழகு மிகைபடக் காணுது
      வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
      வெண்ணிலாவே! - மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
      வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
      வெண்ணிலாவே! - நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
      வெண்ணிலாவே!
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
      வெண்ணிலாவே! - இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
      வெண்ணிலாவே!

-பாரதியார்

No comments:

Post a Comment