24 January 2013

4. விடுதலை வேண்டும்

ராகம் - நாட்டை
பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;

சரணங்கள்

1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
   சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
   ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
   நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
   நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ                                    (வேண்டுமடி)

2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
   விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
   பொருத்த முறநல் வேத மோர்ந்து
   பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர
   வருத்த மழிய வறுமை யொழிய
   வையம் முழுதும் வண்மை பொழிய                                        (வேண்டுமடி)

3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
   பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
   நண்ணி யமரர் வெற்றி கூற
   நமது பெண்கள் அமரர் கொள்ள
   வண்ண மினிய தேவ மகளிர்
   மருவ நாமும் உவகைதுள்ள.                                                          (வேண்டுமடி)

23 January 2013

3. விடுதலை-சிட்டுக்குருவி

பல்லவி

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
   ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
   மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
   வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு.            (விட்டு)

2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
   பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
   முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
  முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு.                          (விட்டு)

3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
   முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
   மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
   வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                          (விட்டு)

16 January 2013

2. ஐய பேரிகை

பல்லவி

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!

சரணங்கள்

1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
    பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
    வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
   வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்                                  (ஐயபேரிகை)

2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
   இன்னமு தினையுண்டு களித்தோம்;
   கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
   காலன் நடுநடுங்க விழித்தோம்.                                             (ஐய பேரிகை)

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
   கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
   நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
   நோக்க நோக்கக் களியாட்டம்.                                                (ஐய பேரிகை)

13 January 2013

1. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

12 January 2013

பாரதியார் ஞானப் பாடல்கள்

பொய்க்கும் கலியை நான்கொன்று பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதியிக்தே.

என்று பாடிய பாரதியாரின் ஞானம், வாக்கு முதலியவற்றை பாராட்ட வயதில்லை என்பதால் அவரை போற்றி வணங்குவோம்.
பாரதியார் ஞானப் பாடல்கள் இனி காண்போம்.