11 October 2012

6. 7. வள்ளிப்பாட்டு

6. வள்ளிப்பாட்டு - 1


பல்லவி

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!

சரணங்கள்

(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
            யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
      யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
      பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)

வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
      விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
      குறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
      பின்ன மறச் செல்லவிட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்
      சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)

வட்டங்க ளிட்டுங் குளமக லாத
      மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
      மேனி தனைவிட லின்றி - அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
      இரவியைப் போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
      இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)

7. வள்ளிப் பாட்டு - 2


ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி

பல்லவி


உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)

சரணம்

எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! - நிலவினில்
நினமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)

-பாரதியார்

No comments:

Post a Comment