28 October 2012

32. யோக சக்தி

வரங் கேட்டல்

விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
      வீரை சக்தி நினதருளே - என்றன்
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
      கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்
      பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி
      வில்லா தகிலம் அளிப்பாயோ?

நீயே சரணமென்று கூவி - என்றன்
      நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
      தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு
வாயே என்றுபணிந் தேத்திப் - பல
      வாறா நினது புகழ்பாடி - வாய்
ஓயே னாவதுண ராயோ? - நின
      துண்மை தவறுவதோ அழகோ?

காளீ வலியசா முண்டி - ஓங்
      காரத் தலைவியென் னிராணி - பல
நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்
      நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
      தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
      நீலியென் னியல்பறி யாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று - பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
      நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
      மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
      கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
      சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
      மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
      நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
      மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
      யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
      பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
      நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
      பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
      கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
      போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
      விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
      சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
      கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
      நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
      தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
      முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
      அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
      பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
      உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
      வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!

- பாரதியார்

No comments:

Post a Comment