50. மாஜினியின் சபதம்
பேரருட் கடவுள் திருவடி யாணை!பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பல்விதத் துழன்ற
வீரர் நம் நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை.
ஈசனிங் கெனக்கு மென்னுடன் பிறந்தோர்
யாவர்க்கு மியற்கையி னளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ?
அத்தகை யன்பின்மீ தாணை.
தீயன புரிதல், முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னெஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை.
தேயமொன் றற்றேன், நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.
மற்றைநாட் டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றியவீடு பெறற்கெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதா மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்தபே ராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்ததா யினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால்
வலியிழந் திருக்கும் என்னுயிர்க் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள்
வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும்
வேற்றுநா டுகளில் அவர்துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்றஇவ் வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே.
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும், அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்,
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான்
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்,
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக்கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்,
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமையோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியா என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்துமுற் கொண்டே.
என்னுட னொத்த தருமத்தை யேற்றாா
இயைந்தஇவ்‘வாலிபர் சபை’க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன். எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமொர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக.
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவறறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால், இயலும்
அளவெலாம், எம்மவரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன்.
உயருமிந் நோக்க நிறைவுற ‘இணக்கம்’
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்,
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வற எங்கள் நாட்டினர் மனதிற்
பேணுமா றியற்றிடக் கடவேன்;
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன்.
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்;
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்;
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
இன்றும்எந் நாளும் இவைசெயத் தவறேன்;
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறி யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக;
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க;
அசத்தியப் பாதகஞ் சூழ்க;
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ!
வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசிலாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளுக ஏழையேற்கு
ஈசன் என்று இதயத் திலகியே.
51. பெல்ஜியத்திற்கு வாழ்த்து
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்;அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைக் தாக்கும்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்.
வண்மையால் வீழ்ந்து விட்டாய்;
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையைக் காத்து நின்றாய்.
மானத்தால் வீழ்ந்து விட்டாய்;
மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆனத்தைச் செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய்.
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்;
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய்,
பாம்பினைப் புழுவே யென்றாய்
நேரத்தே பகைவன் தன்னை
‘நில்’லென முனைந்து நின்றாய்.
துணிவினால் வீழ்ந்து விட்டாய்;
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவளர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்தபோது
பணிவது கருத மாட்டாய்,
பதுங்குதல் பயனென் றெண்ணாய்.
தணிவதை நினைக்க மாட்டாய்,
‘நில்’லெனத் தடுத்தல் செய்தாய்.
வெருளுத லறிவென் றெண்ணாய்;
விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை
“உருளுக தலைகள், மானம்
ஓங்குகெ”ன் றெதிர்த்து நின்றாய்.
யாருக்கே பகையென் றாலும்
யார்மிசை இவன் சென்றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்தர வெண்ணிடாமல்
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய்.
வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண் டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பர்
ஆள்வினை செய்யும் போதில்
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.
விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்றும் மட்டும்
களக்கமாரிருளின் மூழ்குங்
கனகமா ளிகையு முண்டாம்
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர்
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?
52. புதிய ரஷ்யா
ஜார் சக்ரவர்த்தியின் வீழ்ச்சி
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்!
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பேரிசைந்த பாவி.
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய் சூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்.
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
தூக்குண்டே யிறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ!
53. கரும்புத் தோட்டத்திலே
ஹரிகாம்போதி ஜன்யம்
ராகம் -- ஸைந்தவி
தாளம் -- திஸ்ரசாப்பு
பல்லவி
கரும்புத் தோட்டத்திலே -- ஆ
கரும்புத் தோட்டத்திலே.
கரும்புத் தோட்டத்திலே -- அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே -- ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே -- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்தி தற்கிலையோ -- செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்தக் (கரும்புத் தோட்டத்திலே)
பெண்ணென்று சொல்லிடிலோ -- ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ -- அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ -- தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கொர்
கண்ணற்ற தீவினிலே -- தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக் (கரும்புத் தோட்டத்திலே)
நாட்டை நினைப்பாரோ -- எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ -- அவர்
விம்மிவிம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே -- துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க அழுதசொல்
மீட்டும் உரையாயோ -- அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் (கரும்புத் தோட்டத்திலே)
நெஞ்சம் குமுறுகிறார் -- கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் -- துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே -- அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ -- ஹே
வீர கராளி, சாமுண்டி காளி! (கரும்புத் தோட்டத்திலே)
No comments:
Post a Comment