22 October 2012

23. சக்தி விளக்கம்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி,
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று.

-பாரதியார்

No comments:

Post a Comment