எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்,
தருவள் இன்றென தன்னை யென் காளி,
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,
நான்வி ரும்பிய காளி தருவாள்.
-பாரதியார்
No comments:
Post a Comment