30 October 2012

39. வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
      எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
      வேண்டி னேனுக் கருளினன் காளி,
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
      சாரு மானுட வாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
      பாரில் வெற்றி எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
      எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
      காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
      வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
      வெல்க காளி பதங்களென் பார்க்கே.

-பாரதியார்

No comments:

Post a Comment