20 October 2012

19. பராசக்தி

கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்,
      காவி யம்பல நீண்டன கட்டென்பார்,
விதவி தப்படு மக்களின் சித்திரம்
      மேவி நாடகச் செய்யுளை வேவென்பார்,
இதயமோ எனிற் காலையும் மாலையும்
      எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேண்டில தன்னை பராசக்தி
      இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
      நையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே,
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
      கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்,
      பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
      ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
      நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
      பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y
முட்டும் அன்புக் கனலொடு வாணியை
      முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
      கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.

மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
      வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்
      ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்
      ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
"மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!
      வாழ்க தாய்!" என்று பாடுமென் வாணியே.

சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
      சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
      அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
      கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
      பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!

-பாரதியார்

No comments:

Post a Comment